• March 27, 2024

தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில்?

 தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில்?

உலகில் எம்மொழிக்கும் இல்லாத தனித்துவமான சிறப்புகள் நம் தமிழ் மொழிக்கு இருக்கிறது. பொதுவாக மருத்துவ குறிப்புக்கள் என்பது பல மொழிகளில் இருக்கும், ஆனால் ஒரு மொழியே மருத்துவமாக இருக்கிறது என்றால், அந்த பெருமை நம் செம்மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.


நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா!

a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து உயிரெழுத்துகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டும் ஏன் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன என்று தெரியுமா? இங்கேதான் நம் மொழியின் சிறப்பு அடங்கியிருக்கிறது.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ  ஆகிய பன்னிரண்டும் தமிழில் உள்ள உயிரெழுத்துகள். இந்தப் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் குறில், நெடில் என்று இரண்டு வகைகளாய்ப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலளவு எவ்வளவோ, அதை வைத்துத்தான் ஓர் எழுத்தை குறில் என்றும், நெடில் என்றும் சொல்கிறோம்?


கண்ணிமைப்பதற்கும், கையைச்சொடுக்குவதற்கும் தேவைப்படும் நேரத்தை ஒரு மாத்திரை என்பார்கள். சொடுக்குப் போடும் நேரம் ஒரு மாத்திரை. குறில் எனப்படும் எழுத்துகளை ஒலிக்க ஒரு மாத்திரையளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்கள். இவற்றை ஒலிக்க ஒரு கைச்சொடுக்கு நேரம் போதுமானது.

நெடில் எனப்படும் நெட்டெழுத்துகளை ஒலிக்க இரண்டு மாத்திரையளவு காலம் தேவைப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – ஆகிய ஏழும் நெடில்கள். இவ்வெழுத்துகளை ஒலிக்க இரண்டு சொடுக்குக் கால அளவு தேவைப்படும். குறிலை நீட்டி ஒலிப்பதோ, நெடிலைக் குறைத்து ஒலிப்பதோ மிக தவறு. தமிழில் குறிலைக் குறுக்கியும், நெடிலை நீட்டியும் கூற வேண்டும்.


நிலநடுக்கோட்டை ஒட்டிய நம் நிலப்பகுதி மிகுந்த வெப்பமுடையது. அதனால் நம்மால் ஓர் எழுத்தை நீட்டித்து நன்கு ஒலிக்க முடியும். அவ்வாறு ஒலிப்பது உடலுக்கும் உயிருக்கும் ஊட்டம் தரவல்ல மூச்சுப் பயிற்சியும் ஆகும்.

அ என்னும் உயிரெழுத்தின் நீண்ட ஒலிப்புத்தான் ஆ. அவ்வாறே பிற உயிர்நெடில்களும் தமக்கு முன்னுள்ள குறிலின் நீண்ட ஒலிப்பாகத்தான் இருக்கின்றன.  நம் தமிழ் மொழி  எழுத்துகளில், குறில்களைவிடவும் நெடில்கள் மிகுதியாய் இருக்கின்றன. ஐந்து குறில்களுக்கு ஏழு நெடில்கள் உள்ளன. நெடில் எழுத்துகளை ஒலிக்கும்போது நம் மார்பு சுருங்கி விரிகிறது. ஆ என்னும்போது மார்புக் காற்று நன்கு வெளியேறுகிறது. உடலில் உள்ள காற்று வெளியேறுமளவு வாயை திறக்கிறோம். ஊ என்னும்போது கிட்டத்தட்ட ஊதுகிறோம். ஒலித்து முடித்ததும் நுரையீரலுக்குள் புத்தம் புதிதாய் உயிர்க்காற்று நிரம்புகிறது.

ஆனால், ஆண்டுக்குப் பாதிநாள்கள் பனிபெய்யும் நிலத்தவர்களாகிய மேலை நாட்டினர், தம் எழுத்துகளை நெடிலாய் ஒலித்தால் உடற்காற்று மொத்தமும் வெளியேறிவிடும். உடற்காற்றோடு உடல்வெப்பமும் வெளியேறி நடுக்கம் கண்டுவிடும். அது மட்டுமில்லை, ஒலித்துவிட்டு மீண்டும் உள்ளிழுக்கும் புதுக்காற்று, உடலை உறைய வைக்கும் குளிர்ந்த வெப்பநிலையில் இருக்கும். இச்செய்கையால் உடல் வெப்பம் முழுதாய்த் தணிந்து, இறக்க வேண்டிவரும். அதனால்தான் குளிர்ப்பிரதேச மொழியினராகிய ஆங்கிலேயர்கள், தம் மொழிச் சொற்களை மேல்கீழ் தாடைகளைக் கூடப் பிரிக்காமல் பேசுகின்றனர்.


ஆனால், தமிழ் மொழியின் எழுத்துகளும் சொற்களும் ஊக்கமுடன் கணீரென்று ஒலிக்கப்பட வேண்டியவை. தமிழ்மொழிச் சொற்கள் ஒவ்வொன்றின் ஒலிப்பிலும் உடலுக்குள் புத்துயிர்க்காற்று பரவும்.

தமிழ் ஒரு மொழியாக மட்டும் இல்லாமல், ஒரு உயிராக, ஒரு உணர்வாக, உடல் காக்கும் மருத்துவமாக இருப்பது என்பது, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பெருமையே…!