Deep Talks Tamil

“மாணவர்களின் வாழ்வை வடிவமைக்கும் சிற்பி – நல்ல ஆசிரியர் யார் தெரியுமா?”

கல்வி என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல. அது வாழ்க்கையின் பாடங்களையும் கற்றுத்தரும் ஒரு பயணம். இந்தப் பயணத்தில் நம்மை வழிநடத்தும் தலைசிறந்த வழிகாட்டிகளே ஆசிரியர்கள். பெற்றோருக்கு அடுத்தபடியாக நம் வாழ்வில் முக்கிய இடத்தை வகிப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் கற்பிப்பவர்கள் அல்ல. மாறாக, வாழ்க்கையின் அடிப்படை விழுமியங்களை கற்றுத்தருபவர்கள்.

நமக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் அனைவருமே ஆசிரியர்கள்தான். ஆனால் அதில் நல்ல ஆசிரியர் யார் என்று தெரிந்து கொள்வது முக்கியம். எங்கே பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும், என்னெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொல்லித் தரக் கூடாது. பார்க்க கற்றுக் கொடுப்பது மட்டுமே ஆசிரியரின் கடமை. எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுப்பது அந்த மாணவனின் உரிமை. அப்படிக் கற்றுக் கொடுப்பவர்தான் நல்ல ஆசிரியர்.

நல்ல மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது. அவர்கள் வெளியுலகத்தில் என்ன என்ன இருக்கிறது, அதன் அம்சங்கள் என்ன, அது நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று கற்றுத்தருகிறார்கள். மாணவனை நல்வழிப்படுத்துவது தான் ஆசிரியரின் கடமை. ஆனால் அவன் எதை செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது அவனின் உரிமை.

சமூகம் என்றால் என்ன, நாடு என்றால் என்ன, நம்முடைய நாட்டின் கடமை என்ன என்பதையும் நாம் நம் ஆசிரியர் மூலமாகத் தெரிந்துக் கொள்கிறோம். ஆசிரியர் நம் திறமையை இந்த இந்த வழிகளில் வளர்க்கலாம் என்ற யோசனை கூறலாம். ஆனால் நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். பல வழிகள் இருந்தாலும் எது நமக்குச் சரியானதாக இருக்கும் என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

எரிவிளக்காயினும் அதற்கோர் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். தூண்டுகோல் தான் உங்கள் ஆசிரியர்கள். உங்கள் திறமைகளுக்கு ஏற்ப உங்களை சிறந்த மாணவனாக யார் உருவாக்குகிறாரோ அவர் தான் நல்ல ஆசிரியர். புத்தகத்தில் உள்ளதை மட்டும் கற்றுக் கொடுக்காமல் எதிர்கால வாழ்க்கைக்கான பாதையை நமக்குக் காட்டுபவர் தான் சிறந்த ஆசிரியர்.

நல்ல ஆசிரியர் மாணவர்களின் சுதந்திரத்தை மதிக்கிறார். வழிகாட்டுகிறார், ஆனால் திணிப்பதில்லை. திறமைகளை வெளிக்கொணர உதவுகிறார். தனித்துவத்தை ஊக்குவிக்கிறார். வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தருகிறார். என்ன என்ன வழிகளில் சென்றால் முன்னேறலாம் என்று கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர் தான். ஆனால் எதில் செல்ல வேண்டும் என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

உண்மையான ஆசிரியர் என்பவர் வெறும் கல்வியை மட்டும் கற்றுத்தருபவர் அல்ல. அவர் ஒரு வழிகாட்டி, ஒரு நண்பர், ஒரு வழித்துணை. அவர்கள் நம் வாழ்வின் முதல் வழிகாட்டிகள். நம் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள். அத்தகைய ஆசிரியர்களை நாம் என்றும் போற்ற வேண்டும்.

Exit mobile version