தொழில்நுட்ப யுகத்தில் ஓய்வின்றி இயங்கும் நம் வாழ்க்கையில், நிம்மதியான தூக்கத்திற்காக மட்டுமே சுற்றுலா செல்லும் புதிய போக்கு உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த ஸ்லீப் டூரிஸம் உண்மையில் ஆரோக்கியமானதா?
ஸ்லீப் டூரிஸம் என்றால் என்ன? இது ஏன் பிரபலமாகிறது?
சுற்றுலா என்றால் புதிய இடங்களைப் பார்ப்பது, புகைப்படங்கள் எடுப்பது, பிரபலமான உணவுகளைச் சுவைப்பது என்பதே பெரும்பாலானோரின் எண்ணம். ஆனால் தற்போது ‘ஸ்லீப் டூரிஸம்’ எனும் புதிய போக்கு உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது.

ஸ்லீப் டூரிஸம் என்பது வித்தியாசமான இடங்களைப் பார்ப்பதற்கோ, சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கோ அல்லாமல், நன்றாக தூங்குவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் சுற்றுலா பயணம். இதில் நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி, அமைதியான இயற்கைச் சூழலில் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதே முக்கிய நோக்கம்.
“எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், ஒரு நல்ல தூக்கத்திற்காக ஏங்கியிருக்கிறேன். பள்ளி காலம், கல்லூரி நாட்கள், அதன் பிறகு வேலை என வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, மெய் மறந்து தூங்கிய நாட்கள் குறைவுதான்,” என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பங்குச் சந்தை வணிகரான ஹரி.
ஹரி போன்ற பலர் சில மாதங்களுக்கு ஒருமுறை தூங்குவதற்காக மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். “அப்படிச் செல்லும்போது, நான் புதிய இடங்களுக்கு செல்வதில்லை. பழக்கப்பட்ட மலை அல்லது கடல் சார்ந்த பகுதிகளுக்கே செல்வேன். அங்கு செல்லும்போது, எனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 2-3 நாட்கள் ஓய்வெடுப்பேன்,” என்று விளக்குகிறார் அவர்.
உலகளாவிய போக்காக மாறும் ஸ்லீப் டூரிஸம்
இளம் தலைமுறையினர் மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான ஒரு சிறிய போக்கு என நினைக்கலாம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 105 ஆண்டுகள் பழமையான ‘ஹில்டன்’ நிறுவனத்தின் ஆய்வு, இது உலகளாவிய போக்காக மாறிவருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
உலகின் பல பாகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி:
- ஜென் ஸி (1997-2012 காலத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையில் 55% பேர்
- மில்லனியல் (1981-1996) தலைமுறையில் 60% பேர்
- ஜென் எக்ஸ் (1965-1980) தலைமுறையில் 68% பேர்
- பேபி பூமர்ஸ் (1946-1964) தலைமுறையில் 67% பேர்
தூங்குவது மற்றும் ஓய்வெடுப்பதற்காக மட்டுமே சுற்றுலா செல்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் ஸ்கைஸ்கேனர் என்ற பயண வலைதளத்தின் தகவலின்படி, பிரிட்டன் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் தங்கள் விடுமுறைத் திட்டத்தில் தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
கோடிக்கணக்கில் வளரும் ஸ்லீப் டூரிஸம் சந்தை
கிரெடென்ஸ் ரிசர்ச் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் ஸ்லீப் டூரிஸம் சந்தை தோராயமாக 70.14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 6.13 லட்சம் கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2032ஆம் ஆண்டில் 127.91 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 11.18 லட்சம் கோடிகள்) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய போக்கை கவனத்தில் கொண்டு, சுற்றுலாத் துறையில் பல நிறுவனங்கள் தங்கள் வசதிகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன. யோகா, நீச்சல் பயிற்சி, ஸ்பா, ஆரோக்கியமான உணவுகள் போன்ற வசதிகளுடன், நகரங்களிலிருந்து தொலைவில், இயற்கைச் சூழலில் அமைந்த விடுதிகள் அதிகரித்து வருகின்றன.
“நகர வாழ்க்கையில் இருந்து ஒரு பிரேக்”
மும்பையைச் சேர்ந்த ஜோதி ஷிங்கே, தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்திலிருந்து 2,118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சக்ரதா எனும் மலை கிராமத்தில், சொந்தமாக ஒரு தங்கும் விடுதி மற்றும் கஃபே நடத்தி வருகிறார்.
“தன்னுடைய விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் இயற்கைச் சூழலில் நிம்மதியாக ஓய்வெடுக்கவே வருகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என பலரும் குடும்பத்துடன், நண்பர்களுடன், நகர வாழ்க்கையிலிருந்து ஒரு ‘பிரேக்’ எடுத்துக்கொள்ள வருகிறார்கள்,” என்று விளக்குகிறார் ஜோதி.
ஜோதியின் விடுதியில் ‘வை-ஃபை’ இணைய வசதி கிடையாது. “இங்கு வருபவர்கள், இணைய உலகிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு வருகிறார்கள். வை-ஃபை இல்லாத காரணத்தால், ஸ்மார்ட்போன் பார்ப்பது குறைந்து, அவர்கள் உண்மையான ஓய்வை அனுபவிக்கிறார்கள். அருகில் இருக்கும் காடுகள், நீர்வீழ்ச்சிகள் என எல்லாம் சேர்ந்து ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கிறது,” என்கிறார்.
“சுற்றுலா தொடர்பான மக்களின் ரசனை மாறிவருகிறது. குறைவான மனிதர்கள் இருக்கும் இடத்தையே பலரும் விரும்புகிறார்கள். அத்தகைய வாடிக்கையாளர்களை மனதில் வைத்துதான், மணாலி, ஷிம்லா, போன்ற பிரபல சுற்றுலா தலங்களில் விடுதி தொடங்காமல், இந்த சிறிய மலை கிராமத்தில் தொடங்கினேன்,” என்று கூறுகிறார்.
ஸ்லீப் டூரிஸம் ஆரோக்கியமானதா? மருத்துவர்கள் கருத்து
“நகரங்களில் இருக்கும் இரைச்சல், அன்றாட பரபரப்பிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இதை பலர் விரும்பலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது நிச்சயமாக நல்லதல்ல,” என்கிறார் மனநல மருத்துவரும், சென்னை கீழ்பாக்கம் மனநல மையத்தின் முன்னாள் இயக்குநருமான பூர்ண சந்திரிகா.
அவரது கருத்துப்படி, 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது ஒரு தினசரி வழக்கமாகவே இருக்க வேண்டுமே தவிர, அதற்காக சேர்த்து வைத்து வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில் அல்லது சுற்றுலா சென்று தூங்குவது உடலுக்கு நல்லதல்ல
“பலரும் நினைப்பது நேற்று 3 மணிநேரம் தூங்கிவிட்டு, இன்று 10 மணிநேரம் தூங்கினால் சரியாகிவிடும் என்று. ஆனால் மனித உடல் அப்படி இயங்குவதில்லை. தினசரி முறையாக தூங்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்,” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா
இந்தியர்களின் தூக்கப் பழக்கங்கள்: ஆய்வு முடிவுகள்
2019இல், ‘இந்தியன் ஜர்னல் ஆப் ஸ்லீப் மெடிசினில்’ வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி:
- இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் 64% பேர் காலை 7 மணிக்கு முன்பே எழுந்திருக்கிறார்கள்
- 61% இந்தியர்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்
- 31–50 வயதுக்குட்பட்டவர்களில் தூக்கமின்மை அதிகமாக (47.91%) காணப்படுகிறது
- 16–30 வயதுக்குட்பட்டவர்களில் இந்த விகிதம் 31.66% என்ற அளவில் உள்ளது
இந்திய இளைஞர்களிடையே அதிகரித்துவரும் நாள்பட்ட தூக்கமின்மைக்கு பின்வரும் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:
- நவீன வாழ்க்கை முறை
- முறையற்ற தூக்க சுழற்சி
- பல்வேறு நோய்கள்
- ஷிஃப்ட் முறையிலான வேலை மற்றும் அடிக்கடி பயணம்
- குறட்டை போன்ற தூக்கக் கோளாறுகள்
- மருந்துகள் மற்றும் குழந்தை வளர்ப்பு
ஒய்வு தேவை, ஆனால் சீரான தூக்கமே சிறந்தது
நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து தற்காலிக ஓய்வுக்காக ஸ்லீப் டூரிஸம் உதவலாம். ஆனால் மருத்துவர்கள் கருத்துப்படி, தினசரி சீரான தூக்கப் பழக்கத்திற்கு மாற்றாக இதைக் கருத முடியாது.
நாள்பட்ட தூக்கமின்மை உடல் மற்றும் மனநலத்தில் பல தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே தூங்குவதற்காக சுற்றுலா செல்வது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்க முடியும், நிரந்தர தீர்வாக இருக்க முடியாது.
அன்றாட வாழ்வில் சீரான தூக்கப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதே, உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.