Deep Talks Tamil

100% காகிதம் இல்லாத டிஜிட்டல் அரசாக மாறிய துபாய் அரசாங்கம் !!!

எமிரேட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், 100% காகிதம் இல்லாத உலகின் முதல் அரசாங்கமாக துபாய் அரசு மாறியுள்ளது என அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த துபாயும் இனி டிஜிட்டல் துபாயாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் திர்ஹாம் அரசாங்கத்திற்கு சேமிக்கப்படும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 2650 கோடி ரூபாய் அரசுக்கு சேமிப்பாக இருக்குமாம். துபாய் முழுமையாக டிஜிட்டல் மயமானதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Dubai Digital Wealth and IoT strategy - Smart Cities Association

துபாய் அரசாங்கத்திற்கு கீழ் இயங்கும் 45 துறைகளில் ஒரு துறையில் கூட இனி காகிதங்கள் பயன்படுத்தப்படாது. அனைத்து விதமான தகவல்களும் டிஜிட்டல் முறையிலேயே சேமிக்கப்படும். துபாய் அரசாங்கத்தின் அனைத்து உள், வெளிப்புற பரிவர்த்தனைகள் மற்றும் நடைமுறைகள் இப்போது 100% டிஜிட்டல் மற்றும் விரிவான டிஜிட்டல் அரசாங்க சேவைகள் தளத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்றன.

இளவரசர் ஷேக் ஹம்தான் தனது அறிக்கையில், வாழ்க்கையை அதன் அனைத்து அம்சங்களிலும் டிஜிட்டல் மயமாக்கும் துபாயின் பயணத்தில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தை ஆரம்பித்துள்ளதாக கூறினார். மேலும் இந்த சாதனையானது துபாய்க்கு முன்னணி டிஜிட்டல் மூலதனம் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது என குறிபிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அரசாங்க நடைமுறைகள் மற்றும் குடிமக்களின் அடையாளங்களை உள்ளடக்கிய அரசாங்க செயல்பாட்டை பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்டங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும் சைபர் தாக்குதல் குறித்த சந்தேகங்கள் நிலவி வந்ததால் அதை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் துபாயில் டிஜிட்டல் வாழ்க்கையை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உத்திகளை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் கூறினார்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு நாட்டை காகிதம் இல்லாத நாடாக மாற்றியுள்ளது என நினைத்துப் பார்க்கும்போது சற்று வியப்பாக இருக்கிறது. காகிதங்களை உபயோகிப்பதால் கோடி கணக்கான மரங்கள் வருடம்தோறும் வெட்டப்படுகின்றன. இதனை தடுக்கும் முயற்சியாக ஒட்டுமொத்த துபாயும் டிஜிட்டலாக மாறியுள்ளது வரவேற்கத்தக்கது.

டிஜிட்டல் மயமாக உருவெடுத்துள்ள துபாய் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழ் இணைந்திருங்கள்.

Exit mobile version