பாரம்பரிய நாட்டுக்காய் கறி விதை வகைகள்..! – அட இவ்வளவு நன்மைகளா?

Traditional seeds
இயற்கையோடு இணைந்த வாழ்வினையும் மேற்கொண்ட போது மனித இனம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்தது, என்று செயற்கையை நாம் விரும்பி சென்றோமோ, அன்று முதல் ஆரோக்கிய சீர்கேடு ஆரம்பித்தது என்று கூறலாம்.
விவசாயத்தை முழு மூச்சாக கொண்டு செயல்பட்ட நம் நாட்டில் பாரம்பரிய நாட்டு விதைகளை பயன்படுத்தி ஆரம்பத்தில் பயிரிட்டு வந்தார்கள். இந்த விதையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரமாக இருந்ததன் காரணத்தால் தான் நமது முன்னோர்கள் அனைவரும் 90 வயதுக்கு மேல் வாழ்ந்து வந்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
இதனை அடுத்து நம் தந்தையர்கள் அனைவருமே சராசரியாக 70 வயது வரை வாழ்ந்து இருக்கிறார்கள். இந்த ஆயுள் குறைவுக்கு காரணம் என்ன என்று நீங்கள் என்றாவது யோசித்து இருக்கிறீர்களா.

நம் தலைமுறையில் சிறிய வயது உடையோரும் திடீரென இறந்து விடுவதற்கு காரணம் நம் உண்ணும் உணவின் தரமும் உணவு பழக்க வழக்கங்களும் வாழ்வியல் முறைகளும் மாறி இருப்பது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தரமான நாட்டு காய்கறிகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நமது ஆயுள் அதிகரித்தது. ஆனால் என்று நாம் அந்த நாட்டு காய்கறிகளை விடுத்து ஹைபிரிட் என்று நகர ஆரம்பித்தோமோ, அன்று முதல் நமது ஆயுளின் ஒரு பகுதியை இழந்து விட்டோம் என்று தான் கூற வேண்டும்.
பாரம்பரிய நாட்டுக் காய்கறிகளில் வெண்டைக்காய், சிவப்பு வெண்டை, பருமன் வெண்டை, மரவண்டை, மலை வெண்டை, பச்சைக்கிளி வெண்டை, காபி வெண்டை, துறையூர் வெண்டை, விருதுநகர் வெண்டை, கஸ்தூரி வெண்டை போன்ற ரகங்கள் இருந்தது.
அதுபோலவே அவரைக் காயிலும் கோழி அவரை, ஊதா நிறத்தில் இருக்கும் அவரை, பச்சை நிறத்தில் இருந்த கோழி அவரையும் வழக்கத்தில் இருந்தது. மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தப்பட்டை அவரை, அவரை பட்டாணி, யானைக்காது அவரை என பல வகைகள் அவரையும் இருந்தது.
கத்திரிக்காயை பொருத்தவரை கொட்டாம்பட்டி கத்தரி, வெள்ளை கத்திரிக்காய், ஊதா கத்தரிக்காய், வேலூர் முழு கத்திரிக்காய், திருப்பூர் பவானி கத்திரிக்காய் என பாரம்பரிய கத்திரிக்காய் நாம் பயன்படுத்தினோம்.

பீர்க்கங்காயில் குட்டை பீர்க்கன், நாட்டை பீர்க்கன், நுரைத்பீர்க்கன், சித்திரை பீர்க்கன், குண்டு பீர்க்கன், ஆந்திரா குட்டி பீர்க்கன் என பல ரகங்கள் இருந்தது. அதுபோலவே சுரைக்காயில் சட்டி சுரைக்காய், நீட்டு சுரைக்காய், கும்ப சுரைக்காய், குடுவை சுரைக்காய், நாமக்கல் சுரைக்காய், யானைக்கால் சுரைக்காய், ஐந்து அடி சுரைக்காய், ஆட்டுக்கால் சுரை, வாத்து சுரைக்காய் போன்ற ரகங்கள் இங்கு எங்கு போனது.
பரங்கிக்காயில் வெள்ளைப் பரங்கி, குடுவைப் பரங்கி, தலையணை பரங்கி ,ஆரஞ்சு நிற பரங்கி, பொள்ளாச்சி பரங்கி போன்ற இனங்கள் இன்று இருக்கிறதா? என்று கேட்கத் தோன்றும் அளவு குறைந்து விட்டது.

கீரை வகைகளில் புளிச்ச கீரை, பச்சை புளிச்ச கீரை, சிகப்பு தண்டு கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி கீரை என இயற்கையாகவே விளைந்த கீரைகளை தான் நாம் பயன்படுத்தி வந்தோம்.
அரசாணியில் இருக்கும் சத்து கேரட்டில் இருக்கும் சத்தை விட அதிகம். அதுபோலவே கறி பலா காயனது அனைத்து காய்களை விட அதிக அளவு சக்தி படைத்தது.
இத்தகைய பாரம்பரியமான காய்கறிகளை விடுத்து இன்று வேற்று நாட்டவர்கள் பயன்படுத்தக்கூடிய காய்களை வாங்கி பயன்படுத்தி வருகின்ற நமக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும், என்றால் நமது தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதோடு நமது பாரம்பரிய காய்களையும் உணவு பொருட்களையும் சாப்பிடுவது தான் மிகவும் நல்லது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.