• March 26, 2024

வாழை இலையும் பாம்பும் – நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம்

 வாழை இலையும் பாம்பும் – நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம்

‘கல்யாண சமையல் சாதம், சமையல் வெகுபிரமாதம்’ என்று அனைத்து திருமணங்களிலும் வாழை இலையில், தமிழ் நாட்டில் விருந்து பரிமாறுகிறார்களே! அதற்கு ஏன் வாழைஇலையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா?


அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம், வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால், அதை வாழை இலை நீக்கிவிடும்.

நம்பமுடியவில்லையா?

இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன்அடிக் கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள். அதற்காகத்தான் பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள், திருமணம், இன்னம் சொல்லப்போனால் சில பகுதியில் இறப்பு வீடுகளிலும் கூட முதலுதவி இருக்கவேண்டும் என்று தயாராக வாழையை மங்களகரம் என்று கூறி கட்டிவைப்பார்கள்.


திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே! இவ்வாறு தொல் தமிழ் மக்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவே செய்திருக்கிறார்கள்.


வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் இல்லாமல், நமது முன்னோர் உணவு பரிமாறுவதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள DNA-வை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.


வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது அதனால் தான் சமீப காலம் வரை பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் அதை வாழை இலையில் தான் கட்டித் தருவார்கள். இப்போது அந்தப்பழக்கம் இல்லை!

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது.

வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து. தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாழை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.


தீக்காயம், வெந்நீர்பட்டு ஏற்பட்ட காயம், கொதித்த சூடான எண்ணைய் பட்ட காயம் போன்றவற்றிற்கு வாழையின் குருத்து இலையை எடுத்து காயத்தின் மீது சுற்றி குருத்து இலையை கட்டாக போடலாம். மேலும் தீக்காயங்கள், சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களை வாழையிலையில் தேன் தடவி படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு சில மணிநேரம் வாழையிலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவாக தீக்காயங்களிலிருந்து குணம்பெறலாம்.

இயற்கை மருத்துவத்தில் வாழை இலை குளியல் சிறப்பானது, உடலில் குறைந்த ஆடைகளுடன் இருக்கவைத்து உடல் முழுவதும் வாழை இலை போர்த்து உடல் முழுவதும் கட்டிவிட்டு, மிதமான சூரிய வெப்பத்தில் சில மணி படுக்கவைத்துவிடுவார்கள். உடல் முழுவதும் தோலில் அடைபட்டிருக்கும் அனைத்து நுண்ணிய துவாரங்களை மீண்டும் திறக்க வைத்து, தோல் மூலமாகவும் நம்மை சுவாசிக்க வைக்கும்.


இது ஒரு சிறப்பான தமிழர் இயற்கை சிகிச்சை முறை

வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமல்லாமல், சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. அதாவது அது கழிவாக மிஞ்சுவதில்லை. வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்து பாகங்களுமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள் உள்ளவைதான்.

இதை வீடியோவாக பார்க்க: