• July 27, 2024

தமிழனின் பழங்கால ஆயுதம் வளரி..! – வளரியைப் பார்த்தால் வெள்ளையெனும் நடுங்குவான்..!

 தமிழனின் பழங்கால ஆயுதம் வளரி..! – வளரியைப் பார்த்தால் வெள்ளையெனும் நடுங்குவான்..!

Valari

தமிழ் அரசர்கள் பயன்படுத்திய பழங்கால ஆயுதமான வளரி மரத்தாலும், இரும்பாலும், யானை தந்தத்தாலும் செய்யப்பட்டது. இன்றும் இந்த கருவியை நீங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம்.

இந்தக் கருவி பார்ப்பதற்கு சற்று தட்டையாகவும், வளைவாகவும் காணப்படும். ஒருபுறம் கடினமாகவும், மறுபுறம் லேசாகவும் இருக்கக்கூடிய இந்த வளரியில் கூர்மையான விளிம்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். காற்றில் வேகமாக சுழன்று சென்று இலக்கை தாக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இதனுடைய சிறப்பு இலக்கை தாக்கி விட்டு திரும்ப மீண்டும் வீசியவரின் கையேகே வந்து சேரும். அதுமட்டுமல்லாமல் இந்த வளரியை நீங்கள் வீசும் போது திரும்பி வராத வண்ணமும் வீச முடியும்.

Valari
Valari

இந்த வளரியைக் கொண்டு வேட்டையாட தமிழர்களால் எளிதில் முடிந்தது. மேலும் வேட்டையாடுவதற்கு என்று வளரியை தனி விதத்தில் வடிவமைத்தனர். இதுவே போருக்கு பயன்பட்ட வளரியானது பட்டையான வடிவத்தில் துல்லிய வடிவமைத்தோடு, கூர்மையான வெளிப்புறங்களை கொண்டிருந்தது.

அது மட்டுமல்லாது போர் வீரர்கள் இந்த வளரியை தங்களது கொண்டையில் சொருகி வைத்திருப்பார்களாம். தக்க சமயத்தில் அதை எடுத்து கனமான முனையை கையில் பிடித்து தோலுக்கு மேலே உயர்த்தி சுழற்றி விரைவாக இலக்கை நோக்கி எறிவார்கள்.

மேலும் இந்த வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விஜய ரகுநாத பல்லவராயர் எழுதியுள்ளார். இந்த வளரியைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியத்திலும் உள்ளது.

சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்கள் வளரியை பயன்படுத்துவதில் கில்லாடிகளாக இருந்திருக்கிறார்கள். இம்மன்னர்களின் தளபதியான போர்படை தளபதியும் வளரியை எறிவதில் வல்லவர். இந்த வளரியின் சிறப்புகளை கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் என்பவர் தனது நூலாகிய மருத்துவ ராணுவ நினைவுகள் என்ற புத்தகத்தில் 1830 இல் எழுதி இருக்கிறார்.

Valari
Valari

மேலும் அற்புதமான இந்த கருவியை பிரிட்டிஷ் ஆயுத சட்டத்தை கொண்டு வந்து வளரியை பயன்படுத்துவதை தடை செய்தார்கள். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளரிகளை கைப்பற்றியதாக சென்னை படை வரலாறு தெரிவிக்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னன் தன்னுடைய படையில் வளரி போர்க்கருவியை அதிகளவு பயன்படுத்தியதாகவும், அதற்கு  ஒரு தனி படையை வைத்திருந்தாராம். இதனால் இவரது ஆயுதக் கிடங்கில் அதிகளவு வளரிகள் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியாவின் குலங்களும், குடிகளும் என்ற நூலில் தெரிவித்திருக்கிறார்.